Sunday

ஒபாமா வருகையை எதிர்ப்பதா? இடதுசாரிகளுக்கு வைகோ கேள்வி!

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நவம்பர் 8 ஆம் தேதியன்று, நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகச் செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சியையும், மிக்க வேதனையையும் தருகிறது.

பலநுhறு ஆண்டுகளாக ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பு இன மக்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு, அமெரிக்க நாட்டிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் கொடூரமாக வதைக்கப்பட்டதை ஆய்வு செய்தால் ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

அமெரிக்க நாட்டில் கொடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, மனிதர்கள் என்ற பட்டியலிலேயே இடம் பெறாமல் இருநத கருப்பர்கள், போராடிப்போராடி, சிறுகச்சிறுக உரிமைகள் பெற்று, 1863 ஜனவரி 1 இல் ஆப்ரகாம் லிங்கன் கருப்பர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, அதைத்தொடர்ந்தும் அவர்கள் போராடி, மகத்தான தியாகங்களைச் செய்து, 1963 இல் பல லட்சம் மக்களிடையே மார்ட்டின் லுhதர் கிங்நான் கனவு காணும் உலகம்என அறிவித்து, அவரும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டு, கருப்பர்கள் நடத்திய போராட்டப் பயணத்தில் உலகம் போற்றும் திருப்புமுனையாக ஒரு கருப்பு இனத்துத் தந்தையின் மகனாகப் பிறந்த பாரக் ஒபாமா அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகி உள்ளார்.

இந்திய தேசப்பிதா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியாரை மனிதகுலத்தின் ஒளிவிளக்காகப் போற்றுகின்ற பாரக் ஒபாமா, தன் அலுவலக அறையில் காந்தியாரின் படத்தையும் வைத்து உள்ளார்.

ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள பாரக் ஒபாமாவை, இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்கக் கடமைப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவின் கொள்கைகள் இந்திய மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், பாரக் ஒபாமாவை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனக் கூறி உள்ளன.

பாரக் ஒபாமா, தனது தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஈராக்கில் இருந்து பெருமளவு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்து உள்ளார். மீதம் உள்ள ஐம்பதாயிரம் பேரும், அடுத்த ஆண்டு இறுதிக்கு உள்ளாகத் திரும்ப அழைக்கப்படுவர் என்று உறுதி அளித்து உள்ளார்.

குவான்டனமோ வளைகுடா சிறைச்சாலையில் சித்திரவதை நிறுத்தப்பட்டு, அந்தச் சிறைச்சாலையையும் மூடுவதற்கு ஒபாமா உத்தரவிட்டார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதாரம், ஜார்ஜ் புஷ்ஷின் எட்டு ஆண்டுக்கால தவறான நிர்வாகத்தாலும், ஈராக் மீதான படையெடுப்பாலும் நொறுங்கிப் போய், மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் ஏற்பட்டு, பதினைந்து சதவீதம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய், பல லட்சம் அமெரிக்க மக்கள் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றிப் பட்டினியோடு போராட வேண்டிய அவலமும் ஏற்பட்டு, அனைத்து பாரங்களையும் சுமக்க வேண்டிய நெருக்கடிக்கு ஒபாமா ஆளாகி உள்ளார்.

உலகம் போற்றும் புரட்சியாளரான கியூபாவின் ஃபிடல் கேஸ்ட்ரோ அவர்கள், ‘பாரக் ஒபாமாவை, குறிக்கோளில் நேர்மையாளராகவே பார்க்கிறேன்என்று பாராட்டி உள்ளார்.

அமெரிக்காவையும், அதன் அதிபரையும் கடுமையாகச் சாடுகின்ற வெனிசூலா அதிபர் ஊஹோ சாவேஸ் அவர்கள்கூட, பாரக் ஒபாமா மீது கடுமையாக சவுக்கை வீசவில்லை.

அமெரிக்க அதிபருக்கு ஆவேசமான எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு ஒரு கேள்வி.

போபால் விஷவாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் உயிர் இழந்தபின், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறப்பு விமானம் மூலம் போபாலில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அமெரிக்காவுக்கே பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட உண்மை அண்மையில் வெளியானதே, அதற்குக் காரணமான காங்கிரஸ் அரசைக் கண்டித்து, இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினார்களா? இல்லை.

ஆப்கானிஸ்தானத்தில் அங்கிருந்த அரசுகளைக் கவிழ்த்து, ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானத்தில் கொண்டு போய் சோவியத் ரஷ்யா நிறுத்தியதற்கு, இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தது உண்டா?

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசலப் பிரதேசத்தை, இந்தியப் பகுதியாக ஏற்றுக் கொள்ளாமல், தங்கள் பகுதி என்று வரைபடம் வெளியிடுகின்ற சீன அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது உண்டா?

ஜம்மு காஷ்மீரில் இருந்து சீனாவுக்கு வருகின்றவர்களுக்கு, கடவுச்சீட்டில் முத்திரை இடாமல், தனித்தாளில் விசா கொடுப்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்தியப் பகுதியை, பாகிஸ்தானுக்கு உரியது என்றும் சீனா அதிகாரபூர்வமாகச் சொல்லி வருவது குறித்து சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, சீனப் பிரதமர் வென்ஜியாபோ, அடுத்து இந்தியா வருகின்றபோது, அவரை எதிர்த்து இடதுசாரிகள் நாடெங்கும் கண்டனப் போராட்டம் நடத்த முன்வருவார்களா?

இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு செய்ததைப் போல, சீன அரசும் ஆயுதங்கள் வழங்கியதே, அதை இடதுசாரிகள் கண்டித்தார்களா?

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் கொடூரப் படுகொலைக்கு ஆளானபோது, தனது நாடு விடுதலைப்புலிகளைத் தடை செய்து இருந்தபோதிலும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, போரை நிறுத்தச் சொல்லி மூன்று முறை குரல் கொடுத்தார்.

முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ இருந்த நேரத்தில், 2009 மே 13 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் ஒரு அவசர பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் வேறு பிரச்சினைகளில் பலர் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும்போது, இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பெரும் அவலம் நேருகிறது என்று வேதனையோடு ஒபாமா அறிவித்ததையும், தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

கருப்பு இனத்தில் இருந்து, வெள்ளை மாளிகை அதிபராகி உள்ள பாரக் ஒபாமா அவர்களை, இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களும் கட்சி, மத எல்லைகளைக் கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டுகிறேன்.

இடதுசாரிகள், தங்கள் போராட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்

தாயகம், வைகோ,
சென்னை -8 பொதுச் செயலாளர்,
31.10.2010 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

1 கருத்துக்கள்:

பொன் மாலை பொழுது said...

அவர்கள் பகல் வேஷக்காரர்கள் என்றுதான் தெரியுமே !

Post a Comment

Send your Status to your Facebook